Thursday, February 17, 2005

தொட்டாச்சிணுங்கியும் தொலைந்து திரும்பும் கனவுகளும்


இரவு பகலென இமைக்கப் பழகவில்லை
இலைகளுக்கெப்போதும் ஓயாத தூக்கம்
தொட்டால்போதும் துவள ஒரு சாக்கு
கைபட்டால் உடல் சுருக்கி கனவுகள் ஒரு கோடி.

நேற்றும் இன்றுமாய் எனதும் உனதுமாய்
எச்சில்பட்டு இடித்து இழைத்து என
ஒரு பாடு உருவாக்கி உருட்டும் கனவு பல.
வயற்றுக்கும் வாழ்க்கைக்கும் நடுவே
விடாப்பிடியாக மேய்ந்து முடித்த
ஒரு மாட்டின் கணக்காய் அசைபோட்டு

நினைவுருட்ட ஆனந்தம் பலமடங்கு.

இன்றைய வாழ்க்கை நாளைய நினைவெனக் கொண்டு
சர்க்கஸ் பழகும் சாகசம் உண்டு.
நாளைய நினைவுகளை கட்டுயெழுப்ப

இன்று துலைக்கும் நிமிடமும் உண்டு.